31/10/2017
மனதை உறைய வைக்கும் புகைப்படம் என்று ஒன்று கேள்விப்பட்டிருப்போமே. சமீபத்தில் அப்படி ஒரு புகைப்படத்தை தோழி ஒருத்தியின் வாட்ஸப் ஸ்டேட்டஸ் பிக்சராக பார்த்தேன்.
அவள் பெற்றோருக்கு காதல் திருமணம். ஒழுக்கமான குடும்ப வாழ்க்கை வாழ தகுதியில்லாத தோழியின் தந்தை இந்த குழந்தை பிறந்தவுடன், தாயையும் குழந்தையையும் தவிக்க விட்டு வேறொரு பெண்ணுடன் ஓடி விட்டார்.
காதல் திருமணம் செய்ததால் சொந்தங்களின் ஆதரவும் இல்லை. அவள் தாய் தனியாக உழைத்து இந்த பெண்ணை படிக்க வைத்து இன்று இந்த பெண் மென்பொருள் துறையில் ஒரு நல்ல பணியில் உள்ளார்.
இந்த பெண்ணும் அம்மா மீது அளவு கடந்த பாசம் உடையவர். அவளது பெரும்பாலான செல்பிக்கள் அம்மாவுடனே இருக்கும். ஆண் இல்லாத வீடு. அவளது காதல், படிப்பு, பண்டிகை, மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் தாயுடனே பகிர்ந்து கொண்டாள்.
இருவருமே சமுதாயத்தின் மீதான வெறுப்போ என்னவோ அதிகம் அடுத்தவர்களுடன் ஒட்ட மாட்டார்கள். பக்கத்து வீட்டுகாரர்களுடன் கூட அதிகம் பேசுவதில்லை. அவர்கள் உலகம் தனி.
இப்படியான சூழலில் சென்னையில் பணிபுரிந்த தோழிக்கு ஹைதராபாத்தில் கொஞ்சம் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க குடும்ப சூழல் காரணமாக தாயை பிரிந்து அங்கு சென்றார்.
இரண்டு மாதம் அங்கு பணி புரிந்த நிலையில் ஒருநாள் விடுமுறைக்கு சென்னை வந்திருந்த போது திடீரென தாய்க்கு உடல்நலக்குறைவு. கடுமையான காய்ச்சலுடன், இதயத்தில் ஏதோ பிரச்சனை.
நான் எதார்த்தமாக என்ன ஹைதராபாத் செட்டாகிருச்சா? என விசாரித்த போது, "இல்லை சென்னையில் தான் ஒரு வாரமா இருக்கேன். அம்மாக்கு உடம்பு சரியில்ல. உயிர காப்பாத்துனா போதும்ன்னு ஒரு பெரிய ஹாஸ்பிடல் கூட்டி வந்துட்டேன்" என்றாள்.
"ஆபரேஷன் பண்ணனும் 10 லட்சம் வரை ஆகும் சொன்னாங்க.. அம்மாக்கு இன்சூரன்ஸ் கூட இல்ல. என் அப்பாக்கு கால் பண்ணி சொன்னேன். போனை கட் பண்ணிட்டு ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டான். இவன்லாம்.." என தந்தையை திட்ட துவங்கினாள்.
"சரி நான் வந்து பார்க்கிறேன். ஏதும் பண உதவி வேணுமா?" என்றேன். என் EMI கூட அப்போதைக்கு நான் கட்டியிருக்க வில்லை. சரி அந்த பெண்ணுக்கு யாருமில்லை என்ற ஃபீல் வந்துற கூடாது என்பதற்காக என் செயினை மனதில் வைத்து கேட்டேன்.
"இல்ல பேங்க்ல ஒரு ப்ரெண்ட் இருந்தா அவள வச்சு பெர்சனல் லோன் போட்டேன். இப்போதைக்கு அம்மாவ காப்பாத்தினா போதும், சரி நான் அப்பறமா பேசுறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாள்.
இதற்கிடையில் நான் ஒருமுறை விசாரிக்க அவளிடமிருந்து பதில் இல்லை. சரியாக இரண்டு வாரம் கழித்து அவள் வாட்ஸப் ஸ்டேட்டஸில் அம்மா இறந்தபடி இருக்க இந்த பெண் முன்னால் அமர்ந்த படி போலி புன்னகையுடன் ஒரு செல்பி. அருகில் யாருமில்லை.
அவள் கண்களில் வெறுப்பு, ஏமாற்றம், சலிப்பு, இதுக்கு மேல இந்த வாழ்க்கை என்ன பண்ணிட முடியும் என்ற சிரிப்பு, இனி யாரிடம் நான் கதைகள் பேசுவேன் என்ற எதிர்பார்ப்பு எல்லாம் தெரிந்தது. அம்மாவின் கண்கள் மூடியிருந்தது.
பதட்டமடைந்து கேட்க போனால் எனக்கு முன்னதாக அவள் மெசேஜ் அனுப்பியிருந்தாள். "அம்மாவ காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க. போனவாரமே எல்லாம் முடிஞ்சது. கடனை வேற கட்டியாகனும். வீட்டை காலி பண்ணிட்டு ஹைதராபாத் வந்துட்டேன். அந்த வீட்டை விட்டு வரவே மனசில்ல"
'மெர்சல்' படத்தில் ஆட்டோ டிரைவர் சிகிச்சைக்காக நகையை அடகு வைப்பதை பார்த்த போது அந்த பெண் நியாபகம் தான் வந்தது. அவளுக்கு துக்கத்தை ஆற்ற கூட நேரம் கொடுக்கவில்லையே?
லோன் போட்டு சிகிச்சையளிக்கும் அளவா மருத்துவம் இருக்கு? லோன் போடக்கூட வழியில்லாம இன்னும் எத்தனை உயிர்கள் போயிட்டுருக்கும்? ஒரே குழப்பத்துடன் வீடு வந்தேன்.
நிச்சயமா இது மக்களும், அரசும், மனசாட்சியுள்ள மருத்துவர்களும் யோசிக்க வேண்டிய நேரம். இலவசமாவோ 5 ரூபாய்க்கோ சீப்பா மருத்துவம் வேணாம். ஆனா லோன் போட்டு பார்க்குமளவு காஸ்ட்லியா போக கூடாது.
கேரளா போல பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிப்பதோ, அலோபதி மருத்துவதுறைய கண்காணித்து ஏழைகளை சரியான மருத்துவர்களிடம் அனுப்புவதோ ஏதோ அரசு செய்யனும். மருத்துவர்களும் ஒத்துழைக்கனும்.
ஒரே மாதிரியான கல்வி எல்லோருக்கும் கிடைக்குதோ இல்லையோ. ஒரே மாதிரியான மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்கனும். ஏன்னா ஒரு உடலின் அதிகபட்ச தேடலே ஒரு உயிர் தான்..!
பகிர்வு