06/10/2022
பூங்குழலி ♥️
’பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்துவிட்டு அதிலிருக்கும் காட்சிகளை புத்தகத்தில் தேடி குறிப்பிட்ட அந்த அத்தியாயங்களை மட்டும் படிப்பது கூட படுசுவாரஸ்யமாக இருக்கிறது. பூங்குழலி வந்தியத்தேவனை இலங்கை அழைத்து வரும் பயணம் மட்டுமே ஏறக்குறைய ஒன்பது அத்தியாயங்கள் வருகின்றன.
பூங்குழலி யார்? எப்படியாகப்பட்டவள்? என்று தொடங்கி அவள் வந்தியத்தேவனை பத்திரமாக பூதத்தீவின் கரைவந்து சேர்க்கும் வரை காட்சிகளின் அழகு காற்றில் விரிகிறது.
படத்தில் இந்தப் பயணம் ’அலை கடல்’ பாடலி்னூடே காண்பிக்கப்படுகிறது.
பழையாறையிலிருந்து வரும் வந்தியத்தேவன் பூங்குழலியை கோடியக்கரையில் சந்திக்கிறான்.
பரஸ்பர அறிமுகம். உரையாடல்.
வந்தியத்தேவனின் சேட்டைகள் என்று அன்றைய நாள் நீள்கிறது.
அந்த இரவில் வந்தியத்தேவன் ஒரு கனவு காண்கிறான்.
கல்கி அந்த கனவினை இங்ஙனம் விவரிக்கிறார்.
//தூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த சிறிய படகில் பூங்குழலியும் அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனிய பூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது. பூங்குழலியின் முகம் அழகே வடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப் பறந்தது. எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்து போய்விட்டது. பூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத் தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன? அது என்ன? ஆ! பூங்குழலியின் பாட்டு! சேந்தன்அமுதன் சொல்லியிருந்தான் அல்லவா?
“பெண்ணே! உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாட மாட்டாயா?” என்றான் வந்தியத்தேவன்.
“என்ன சொன்னாய்?” என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள். ஆகா! அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா?
“உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்.”
“கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்?”
“உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்…”
பூங்குழலி உடனே தன் மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள். கத்தி பிடித்த கையை ஓங்கினாள்.
“இதோ பார்! அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன!” என்றாள்.//
கனவில் வந்தியத்தேவன் பாடச்சொன்ன பாட்டு கல்கியின் எழுத்தில் இரண்டு இடங்களில் ஒலிக்கிறது. பூங்குழலியின் அறிமுகத்தில் முதல் முறையும், இந்தக் கனவுக்கு முன் ஒரு முறையும்.
ஆனால், படகில் அவள் பாடவில்லை.
ஒரு வேளை கனவில் கண்ட காட்சியில் பூங்குழலி பாடியிருந்தார் எப்படியிருக்கும் என்பதை மணிரத்னம் உள்வாங்கி அதையே ஒரு திரைப் பாடலாக சேர்த்துவிட்டார்.
சிவா ஆனந்த் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
முதலில் கல்கி எழுதிய பூங்குழலி பாட்டு என்ன என்று பார்க்கலாம்.
//அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன்றடிப்பதுமேன்?//
‘ஊரு சனம் தூங்கிருச்சு’ பாடல் இதிலிருந்து பிறந்திருக்கும் என்று நம்புகிறேன்.
மாருதம் என்றால் காற்று என்று தெரியும்.
அதென்ன வாரிதி? .. கடலே வாரிதி.
கடலே அடங்கி காற்று தவழும் இந் நேரத்தில் இவள் மனத்தில் மட்டும் ஏன் சுழற்காற்று?
இந்தப் பாடலை கரையோடரத்தில் மிதக்கும் படகில் நின்று பாடுகிறாள் பூங்குழலி. கடலும் இருக்கிறது, நிலமும் இருக்கிறது, கோடியக்கரை காடு இருக்கிறது, அதனூடே வரிகளில் ஒரு சொல்லப்படாத விம்மலும் இருக்கிறது.
பூங்குழலியின் இப்பாடலை கல்கி கண்ணீரில் கலந்து எழுதிய பாடல் என்பார்.
இந்த சோகத்தை தேடலை காத்திருப்பை திரைப் பாடலில் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பது பணி.
//அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ-ஏலோ-ஏலேலோ
அடிமன தாகம் விழியில் தெரியாதோ-ஏலோ-ஏலேலோ//
புத்தகத்தில் பல அத்தியாயங்களில் கதை சொல்லலாம். ஆனால், இந்தப் பாடலில் அத்தனை அத்தியாயத்தையும் காட்ட வேண்டும்.
இவள் காதல்கொண்டு அல்லல் படுகிறாள்.
யாரையோ எண்ணிப் பாடுகிறாள்.
ஆனால், பார்வையாளனுக்கு அது யாரென்று தெரியாது.
வரிகளில் அந்த காதல் புரியப்பட வேண்டும்.
இவள் ‘சமுத்திரகுமாரி’ - இவளை கடல் என்று அடையாளம் செய்துகொள்ளலாம்.
இவள் குறிப்பிடும் காதலனை ‘வானம்’ என்று அடையாளம் செய்துகொள்ளலாம்.
இப்பொழுது வரிகள்.
“பாதை மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள் தானோ!”
எங்கோ பார்த்து அதன் பின் தொலைந்த காதலாய் மேகம்.
“வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ!
மேகம் தொலைந்தாலும் வானும் நீரும்(கடலும்) ஒரு நாள் சேருமா என்கிற நம்பிக்கை.
கேள்வி.
“ஆழியிலே தடமெதுவும் இல்ல -ஏலோ-ஏலேலோ
வான் வெளியின் மீன் ஒளியில் செல்ல-ஏலோ-ஏலேலோ”
வான்வெளிக்குச் செல்ல கடலில் ஏதடி பாதை என்று அவளே அவளுக்கு பதில் சொல்லிக்கொள்கிறாள்.
இருந்தாலும் காதல் அவளுக்கு நம்பிக்கையைத் தருகிறது.
“இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்
இரவுகள் பகலாகும்
முகில் மழை ஆகும்
முறுவலும் நீராகும்”
இன்பம் துன்பமாகும், துன்பம் இன்பமாகும். இரவு பகலாகும். முகில் மழையாகும். நீர் மீண்டும் கார்முகிலாகும். புன்னகை கண்ணீராகும்.
கண்ணீர் கூட புன்னகையாக மாறும்.
இத்தனை மாற்றங்கள் கொண்ட இயற்கை வானையும் கடலையும் சேர்க்காதா என்ன?
“வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
வராதோ அருகாமை நம் பூமியில்
நான் ஒருமுறை வாழ்ந்திட, மறுகரை ஏறிட
பலபல பிறவிகள் கொள்வேனோ
சொல்லிடு”
புலரும்போதும் மறையும்போதும் சூரியன் வானையும் கடலையும் இணைக்கும்தானே.
இதுவரை அவளது சோகத்தையும் தாபத்தையும் சொன்ன பாடல் தனது அடுத்த சரணத்தில் அவளது முன்கதையைச் சொல்கிறது.
“பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாய் இன்றி கருவான ஓர் உயிரா
ஆதாரம் இல்லாத காதலா”
முன்னொரு நாள் யாரையோ அவள் படகேற்றிச் சென்றிருக்கிறாள். அந்தப் பொழுதில் காரணமின்றி உதித்த காதலின் வேலைதான் எல்லாம்.
“கன இடைவெளியில் கரம் பிடிப்பாயா
கரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா
ஓர் பார்வை ஊர் பார்க்க தாராயோ”
அன்றே மனக்கண்களில் காதலைச் சொல்லியிருக்கிறாள் போல.
பாடல் முடிவுறுகிறது.
பொழுது விடிகிறது.
படகு இலங்கையை அடைகிறது.
இப்பொழுது கல்கியின் மொழியில் பூங்குழலி வந்தியத்தேவனிடம் சொல்கிறாள்.
//“பொன்னியின் செல்வரைப் பார்த்து அவரிடம் ஓலையைக் கொடுத்த பிறகு, சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிப் பேச வேண்டியதையெல்லாம் பேசிய பிறகு, அவர் அவகாசத்துடன் இருக்கும்போது ‘சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேள். ‘ஞாபகம் இருக்கிறது’ என்று அவர் சொன்னால், ‘அவள்தான் எனக்குப் படகு வலித்துக்கொண்டு வந்து இலங்கையில் இறக்கி விட்டாள்’ என்று கூறு!”//
வந்தியத்தேவனுக்கு மட்டுமல்ல காண்பவருக்கும் அப்பொழுது தெரிகிறது அவள் அடிமன ஆழத்திலிருந்து வானமாக சித்தரித்த அந்த காதல்நாயகன் வேறு யாருமல்ல,
நம் இளவரவசர் அருள்மொழிவர்மனே.
இந்தப் பயணக் காட்சியில் கடலும் இரவும் கசிந்துருக அதனூடே பூங்குழலியின் பாடல். அவற்றிற்கு மேலாக வந்தியத்தேவனின் ரசனைமிகு கண்கள்.
இந்தக் கண்கள் ரசிக்கும் பூங்குழலியை கல்கி வடிவமைத்த விதம் அழகு.
//ஆம்; அவள் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். பெயருக்குத் தகுந்தாற் போல் இவள் கூந்தலில் ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம் அவளுடைய மேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்?//
அழகணிந்த பெண்களிருக்க அழகே விரும்பி வந்து அணிந்துகொண்ட பேரழகியான சமுத்திரக்குமாரி - ஐஷ்வர்யா லட்சுமியை ‘பூங்குழலி’ என்றே எக்காலமும் கொண்டாடலாம் மானிடரே. .