27/11/2025
வணக்கம் அன்பு உறவுகளே…
சமீபத்தில் ஒரு காணொளியில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தில் எதிர்கொள்ளும் கால தாமதம், சிக்கல்கள் மற்றும் திருமணத் தகவல் இணையதளங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களைப் பார்க்க நேர்ந்தது. பல கருத்துக்கள் யதார்த்தத்தை பிரதிபலித்தாலும், அனைத்தையும் ஏற்க முடியவில்லை.
இன்று பொதுவாக "பெண்கள் குறைவு… ஆண்கள் அதிகம்… அதனால் பெண் கிடைப்பது கடினம்" என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. ஆனால் இயற்கை இப்படியான சமநிலையின்மையை ஏற்படுத்தியதாக தோன்றவில்லை. பெண்கள், ஆண்கள் எண்ணிக்கை சமமாக இருந்தபோதும் நமக்குப் பொருத்தமான வரன் கிடைப்பதில் ஏன் சிக்கல்?
இதற்கான பதிலை தேடினால், நமது பண்டைய இந்திய மரபு சார்ந்த சமூக கட்டமைப்புகளில்தான் காரணம் உள்ளது.
முன்னோர்கள் அமைத்துக் கொடுத்த குடும்ப, சமூகம், கலாசாரம், தொழில் சார்ந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருந்தன. கிராமம், அதனுடனான தொழில், அதனடிப்படையில் இனக்குழுக்கள்—இவை எல்லாம் ஒரு வலுவான சமூக வலையமைப்பை உருவாக்கி வந்தன. இதுவே திருமணப் பந்தங்களுக்கும் அடித்தளமாக இருந்தது.
ஆனால்…
🔹 தொழில்நுட்ப வளர்ச்சி
🔹 நகரமயமாதல்
🔹 தொழில் மாற்றங்கள்
🔹 கட்டாய இடம்பெயர்ச்சி
இவை அனைத்தும் பண்டைய கட்டமைப்பை மாற்றிவிட்டன.
கிராம வாழ்க்கையிலிருந்து நகர வாழ்க்கைக்கு மாற்றம் ஏற்பட்டதால், இயல்பான உறவு வட்டம் குறைந்தது.
வேலைப் பளு, இயந்திரமயமான வாழ்க்கை காரணமாக:
🔹உறவின் சுக–துக்க நிகழ்வுகளில் பங்கேற்பு குறைவு
🔹பண்டிகை, விழாக்களில் பங்களிப்பு குறைவு
🔹உறவு–நட்பு வட்ட நெருக்கம் குறைவு
இவை அனைத்தும் இயல்பான உறவு வலையமைப்பை சீர்குலைத்துவிட்டன.
இந்த உறவு வட்டங்களே முன்பெல்லாம் நம் வாரிசுகளின் திருமணத்திற்கு தானாகவே வாய்ப்புகளை ஏற்படுத்தின.
இன்றோ?
இனக்குழு அடிப்படையிலான திருமண எண்ணம் இன்னும் உள்ளதாலும், முன்னர் இருந்த பரந்த அறிமுகங்கள் இல்லாததால், புதிய பந்தங்களை உருவாக்குவது கடினமாயுள்ளது.
அதற்கான ஒறே தீர்வு:
உறவுகளைப் பேணுவோம், நட்புகளை மேம்படுத்துவோம்.
பொருளாதார நிலை, உயர்வு–தாழ்வு பார்க்காமல் மனித நேயம் அடிப்படையாக உறவை வளர்ப்போம்.
உறவுகளின் வலுவான வலைப்பின்னல் இருந்தால் நம் அடுத்த தலைமுறை திருமண வாய்ப்புகள் எந்தத் தடையுமின்றி இயல்பாக நடக்கும்.
உறவுகளைப் பேணுவோம்… வளர்ப்போம்… பாதுகாப்போம்…
-ஶ்ரீவத்ஸன்@கோவிந்தராஜன் ஐயங்கார்
mangalyam.org