19/02/2017
ஹைட்ரோகார்பன் கதை
சுப. உதயகுமாரன்
(காலச்சுவடு, மார்ச் 2017)
[இதழ் இன்னும் வெளிவராத நிலையிலும், பிரச்சினையின் அவசரம் கருதி கட்டுரையை இங்கேப் பதிகிறேன். அனுமதியின்றி யாரும் அச்சில் பிரசுரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.]
மனிதர் இயங்கத் தேவையானது கார்போஹைட்ரேட்; இயந்திரங்கள் இயங்கத் தேவையானது ஹைட்ரோகார்பன். முன்னது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூன்றும் கலந்த ஒரு வேதியல் கலவை. பிந்தையது கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டும் உள்ளடக்கியது.
நாம் உட்கொள்ளும் உணவின் பெரும்பகுதியான மாவுச்சத்து என்சைம்களின் உதவியோடு குளுக்கோஸ் ஆக மாற்றப்பட்டு நமக்கு சக்தி அளிக்கிறது. இந்தச் செரிமானம் நடக்கும்போது நாம் உள்ளிழுக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் இதற்கு உதவுகிறது. பின்னர் கார்பன்-டை-ஆக்சைட் நாம் வெளிவிடும் மூச்சோடு கலந்து வெளியே வருகிறது. நமது உடம்பின் தட்பவெப்ப நிலையைச் சீராக வைத்திருக்கவும், நம் உடலில் நடக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு சக்தி அளிக்கவும் இந்த கார்போஹைட்ரேட் உதவுகிறது.
அதே போல, ஹைட்ரோகார்பன்கள் என்பவை ஆக்சிஜனின் உதவியோடு எரிந்து ஏராளமான சக்தியை உமிழும் எரிபொருட்கள். ஹைட்ரோகார்பன்களை எரிக்கும்போது வெளியாகும் அளவற்ற வெப்பம் இயந்திரங்களை, மோட்டார்களை, மின் நிலையங்களை இயக்குவதற்கு உதவுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றைத்தான் மொத்தமாக ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கிறோம்.
இந்த ஹைட்ரோகார்பன்கள் நாடெங்கும் சிறு சிறு அளவுகளில் புதைந்திருக்கும் நிலப்பரப்புக்களை அரசு கண்டுபிடித்திருக்கிறதாம். ஆனால் இவை ஆங்காங்கே காணப்படுவதாலும், சிறிய அளவிலேயே இருப்பதாலும், தோண்டி எடுக்க நிறையச் செலவாகும் என்பதாலும், தொழிற்நுட்பக் காரணங்களாலும், பண நெருக்கடியினாலும் அரசே தோண்டி எடுக்க விரும்பவில்லையாம். எனவே தனியார் நிறுவனங்கள் அவற்றை அள்ளி அபகரித்துக் கொள்வதற்கு மோடியின் தேச பக்த அரசு கடந்த ஆண்டு ஏலம் ஒன்றை நடத்தியது.
இந்த ஏலத்தில் 31 டி.எஸ்.எஃப் (Discovered Small Field) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் “கண்டுபிடிக்கப்பட்ட சிறு வயல்கள்” தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள்தான் இம்மாதிரி எரிசக்தி வயல்களை இது வரை மேலாண்மை செய்து வந்தன. ஆனால