08/09/2024
எரிகோ... அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. (யோசுவா 6:1)
கடக்க முடியாதபடி தடையாக இருந்த யோர்தான் நதியை அப்போதுதான் ஜெயித்து முன்னேறியிருந்தான் யோசுவா. இப்போது மற்றுமொரு தடையாக ஊடுருவதற்கரிய பெரிய எரிகோ கோட்டை தனக்கு முன் இருப்பதைக் கண்டான். எரிகோ அடைக்கப்பட்டிருந்தது என்ற இந்த வசனம் (யோசுவா 6:1) யோசுவாவையும் இஸ்ரவேலரையும் எதிர்த்து நின்ற காரியம் மிகவும் கடினமான ஒன்று என்பதை வலியுறுத்திக் கூறுகிறது. யுத்தத்தில் பழக்கமற்ற மக்களாகிய இஸ்ரவேலருக்கு இது நம்பிக்கையற்ற நிலைமையாகக் காணப்பட்டது. எரிகோ கோட்டையை ஆலன் கார் இவ்வாறு விளக்குகிறார்: அங்கே இரண்டு மகா பெரிய கற்சுவர்கள் இருந்தன. வெளிச்சுவர் 6 அடி அகலமும் 20 அடி உயரமுமாக இருந்தது. உட்சுவர் 12 அடி அகலமும் 30 அடி உயரமுமாக இருந்தது. அவை இரண்டுக்கும் இடையில் 15 அடி அகலத்தில் நடைபாதை இருந்தது. இஸ்ரவேலர் எரிகோ பட்டணத்தைக் கைப்பற்ற வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக மகா பெரிய சுவர்களை அவர்கள் தகர்க்க வேண்டியிருந்தது.
அன்பானவர்களே, ஒரு பக்கம் பார்த்தால் இது நம்மில் அநேகருடைய வாழ்வின் படமாக இருக்கிறதல்லவா? நாமும் ஒன்றன்பின் ஒன்றாக பல தடைகளைக் கடந்து செல்கிறோம். இஸ்ரவேலரால் எரிகோவை தவிர்த்து வேறுவழியாக செல்ல முடியவில்லை. அவர்கள் கானான் தேசத்துக்கு முன்னேறிச் செல்ல வேண்டுமானால் இந்தத் தடை நீக்கப்பட வேண்டும். அதைப்போல, விசுவாசிகளான நாம் நம் வாழ்வின் தடையான எரிகோவைத் தகர்க்கவேண்டும். இல்லையென்றால் நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது கூடாத ஒன்றாகிவிடும். இன்று நம் எரிகோ எது? அது, உலக உடமைகளே பிரதானம் என்று கருதுவதா? பாவ பழக்கங்களா? அவிசுவாசமா? பயமா? கிறிஸ்தவ வாழ்க்கையின் வெற்றி இந்த எரிகோக்களை ஜெயம்கொள்வதில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம். இதை நம் சொந்த பலத்தால் செய்ய முடியாது. ஆனால் நாம் கிறிஸ்துவுடன் நிற்போமானால் நமக்கு வெற்றி நிச்சயம். ஏனென்றால் அவரே நமக்காக யுத்தம் செய்கிறார்.
Honey Drops, Daily Devotion, El-Shaddai Literature Ministries