03/05/2020
சூரிய உதயத்திற்கு நேரம் இருந்தது. கிழக்கு வானில் சலித்தெடுத்தது போல வெளிச்சம்! ஓடும் காவிரி ஆற்றில் இடுப்பளவு நீரில் நின்று கொண்டு தேசிகன் சந்தியாவந்தனம் செய்வதை பார்த்த சுதர்சன சூரி, சந்தி முடிக்கும் வரை ஓரமாக அமர்ந்திருக்கலாம் என கொள்ளிடக்கரை மண்டபம் நோக்கி நடந்தார்.
மண்டபத்துக்கு இடது புறத்தில் பாடுவாந்துறை மயானம் இருந்து. அதில் சடலங்கள் எரிந்து புகை வந்தது. அதைப் பார்த்தபடி அமர்ந்தார்.
பார்க்க சற்று அச்சமாகவும் இருந்தது. அந்த சடலங்கள் மிலேச்சர்களை எதிர்க்கப் போய் கொல்லப்பட்டவர்கள்! நாளையே தன் சடலமும் இது போல் எரியக் கூடுமோ என்ற கேள்வி சுதர்சன சூரிக்குள் எழுந்தது.
''கவலை வேண்டாம்... தாங்கள் பெருவாழ்வு வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறீர்'' என குரல் ஒலிக்கவும் திரும்பிப் பார்த்தார். தேசிகன் தான் நின்றிருந்தார். சூரியனும் உதித்து பளிச்சென காட்சிகள் தெரிந்தன. தேசிகனை பளிச்சென நீராடிய கோலத்தில் கண்ட சுதர்சன சூரிக்கு பரவசமாக இருந்தது.
''சந்தியா வந்தனம் முடிந்ததா?'' என சுதர்சனசூரி கேட்டார்.
''முடிந்தது... ஆமாம் தாங்கள் சந்தி செய்யவில்லையா? என்றார் தேசிகர்.
''இப்படி நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும். ஏனோ மனம் வரவில்லை''
''அது எப்படி வராமல் போகும்? மனம் உங்களுக்கு கட்டுப்பட்டதா? இல்லை நீங்கள் அதற்கு கட்டுப்பட்டவரா?''
''நான் என்ன உங்களைப் போல ஞானியா...? சாமான்யன் தானே?''
''எதற்கு இந்த பதில்?''
''உங்களைப் போல மனதை அடக்கியாள முடியாதவன் என்பதற்காக சொன்னேன்''
''மிகத் தவறு... ஒரு பிராமணன் எக்காலத்திலும் எதன் பொருட்டும் இப்படி பேசக் கூடாது''
''நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' அதிர்ந்தார் சுதர்சனசூரி.
''உண்பது, உறங்குவது எப்படி அன்றாடமோ அப்படிப்பட்டதே சந்தியாவந்தனமும்! ஒரு பிராமணன் அதை கைவிடுவது வாழ்வாகாது. பெரும் பாவமுமாகி விடும்''
''பூணுால் போடும் போது வைதீகர் இப்படித் தான் சொன்னார். ஆனால் உற்சாகமும், நம்பிக்கையும் இருந்தால் அல்லவா இதை எல்லாம் செய்ய முடியும்?''
''சந்தியாவந்தன கடமையை தவறாமல் செய்யுங்கள். உற்சாகம், நம்பிக்கை எல்லாம் பொங்கி வரும். உங்களுக்கு வழங்கப்பட்ட பெரும் கவசம் காயத்ரி! நீங்கள் செய்ய வேண்டிய பெரும் கடமை சந்தியா வந்தனம்!
மிலேச்சர்கள் இங்கே அட்டகாசம் புரிந்திட உங்களைப் போன்றோர் இக்கடமையை மறந்ததும் ஒரு காரணம். சந்தியாவந்தன கடமையை சரியாகச் செய்யும் சமூகத்தில் எதிரிகள் உருவாக மாட்டார்கள். அமைதி நிலவும்! மன அமைதி, உடல்நலம் என்று எல்லாம் நல்லபடியாக இருக்கும்''
''அப்படியா... இதன் பின்புலத்தில் இவ்வளவு விஷயம் இருப்பதை அறியாமல் போனேனே''
''இன்னமும் அறிய வேண்டியவை பல உள்ளன. உலக உயிர்களில் பிராமணனாக பிறப்பவன் மட்டும் பெரும் கடன்காரன் என்பதை அறிவீராக. கோடீஸ்வர பிராமணன் வயிற்றில் ஒருவன் பிறந்திருந்தாலும் அவன் கடன்காரனே! சொல்லப்போனால் கடன்காரர்கள் மட்டுமே பிராமணராக பிறப்பர்!''
''அது எப்படி? பிராமணப் பிறப்பை உயர்வாக அல்லவா வேதங்கள் கூறுகின்றன''
''வேதம் கூறுவதால் அவர்கள் உயர்ந்தவர்களே! ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு கடனாளிக்கே பிராமணப் பிறப்பு வாய்க்கும்!''
''யாரிடம் பட்ட கடன்?''
''இப்பிறப்பில் ஒருவருக்கொருவர் வாழ்வின் தேவைக்காக வாங்கும் கடனை சொல்லவில்லை! முன்பு எடுத்த பிறவிகளில் உருவான கடன் இது. இக்கடன் மூவகைப்படும்! முதலாவது ரிஷிகடன்! அடுத்து தேவ கடன்! மூன்றாவது பித்ரு கடன்!''
''அப்படியா?''
''ஆம்... தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் மூவருக்கும் சந்தியாவந்தன வேளையில் விடும் அர்க்யமே நாம் கட்டும் கடன்... பதிலுக்கு அவர்கள் அதனை மழையாக்கியும், தெளிந்த மனம் நமக்கு ஏற்படும்படியும் அருள்கின்றனர்''
''அரிய செய்தி... யாரும் இதுவரை கூறாதது''
''வேதம் சொல்வதையே நான் சொல்கிறேன்''
''எவ்வளவு காலம் சந்தி புரிய வேண்டும்?''
'' உயிர் பிரியும் வரை!''
''செய்யத் தவறினால்?''
''திருத்திக் கொண்டு உடனே தொடங்க வேண்டும். சந்தியா வந்தன கடமையை ஒரு தலைமுறையில் விட்டவன் பிறப்பால் மட்டுமே பிராமணன். இரு தலைமுறை விட்டவர்கள் பிராமணனாக பிறந்தாலும் பிராமணரே இல்லை!''
''போகட்டும்... மனிதன் பாவியாகத் தானே இருக்கக் கூடாது? பிராமணனாக இல்லாவிட்டால் என்ன தவறு?''
''பிராமணனாக பிறந்து கடமையை மறப்பவர்களும் பாவிகளே! சாதாரண பாவிகள் அல்ல...பெரும் பாவிகள்!''
''யாருக்கும் தீங்கு செய்யாத நிலையில், சந்தி செய்யாததால் மட்டும் எப்படி பாவியாவேன்?''
''ஒரு பிராமணன் சந்தி செய்வது தனக்காக இல்லை. சமூகத்திற்காக, தன் குடும்பத்திற்காக என்பதை உணர்வீராக! எனவே அக்கடமை மூலம் சமூக நன்மை புரியாமல் விடுவது பாவம் தானே?''
''அடேயப்பா... சந்தியாவந்தனம் செய்வதில் இவ்வளவு சூட்சுமம் உள்ளதா?''
''இன்னமும் உள்ளது. ஆனால் இது போதனைக் காலம் அல்லவே?''
''மன்னியுங்கள் தேசிகரே... நான் இனி தவறாமல் சந்தி செய்வேன்''
''நீர் மட்டும் செய்தால் போதாது. திருவரங்கத்து பிராமணர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். செய்யத் தவறிய பாவமே மிலேச்ச வடிவில் வந்து நின்றுள்ளது''
''அப்படியானால் எல்லோரும் செய்யத் தொடங்கினால் பிரச்னை தீருமா?''
''நிச்சயமாக! மந்திர பலமுள்ள இடங்களுக்கு எந்த பகைவனாலும் செல்ல முடியாது!''
''நல்லது. நான் இதை எல்லோரிடமும் வற்புறுத்தி அனைவரையும் செய்யும்படி செய்கிறேன்''
பொலபொல என பொழுது விடிந்த நிலையில் பிள்ளைலோகாச்சார்யாரின் விருந்தினர் மாளிகை நோக்கி நடந்தபடியே இருவரும் பேசிக் கொண்டனர். தெருக்களில் ஈ காக்கை இல்லை! இதுவே மற்ற நாளாக இருந்தால் வீட்டுக்கு வீடு தேசிகருக்கு ஆரத்தி எடுத்திருப்பர். பாத நமஸ்காரம் புரிந்திருப்பர்!
மிலேச்சர்கள் தான் குதிரைகளில் குறுக்கும் நெடுக்கும் சென்ற வண்ணமிருந்தனர். அதில் ஒருவன் தேசிகனை நெருங்கியவனாக, ''ஏய் யார் நீ? இது என்ன ஈரக்கோலம்?'' என்று கர்ஜித்தான்.
''ஆற்றில் நீராடி விட்டு வருகிறேன். இது ஈரக்கோலம் மட்டுமல்ல... திவ்ய திருக்கோலமும் கூட!'' என்றார் வேதாந்த தேசிகர். அவன் பதிலுக்கு வேகமாக எதையோ சொல்ல முயற்சித்ததும், அவனை உற்று நோக்கினார் தேசிகர்.
அவன் எதுவும் கேட்காமல் திரும்பிச் செல்லத் தொடங்கினான். சுதர்சனசூரி அதைக் கண்டு ஆச்சர்யம் கொண்டார்.
''அவன் எப்படி திரும்பிச் சென்றான்?'' என்றும் கேட்டார்.
''அவன் மட்டுமல்ல... இந்த திருவரங்கத்தை விட்டு எம்பெருமானை பிள்ளைலோகாச்சார்யார் கொண்டு செல்லும்வரை எவரும் உள் வரமாட்டார்கள். எல்லோரும் திரும்பியே செல்வர்''
''எப்படி?''
''அது தான் ஆத்மசக்தியின் பலம். இதற்கு மேல் எதையும் கேட்க வேண்டாம். நான் எனது யந்திர, மந்திர, தந்திர ஆற்றல் அவ்வளவையும் பயன்படுத்தப் போகிறேன்... எது எனக்காக அல்ல... எம்பெருமானுக்காக!''
தேசிகர் சொல்லி முடிக்கவும், விருந்தினர் மாளிகை வரவும் சரியாக இருந்தது. வெளியே சிலர் காத்திருந்தனர். பலர் பூர்ண கலசமுடன் வேதம் சொல்லியபடி இருந்தனர்.
தேசிகர் வரவும் அவரை எதிர்கொண்டு வரவேற்று சாலை என்றும் பாராமல் விழுந்து வணங்கினர். தேசிகரும் அதை ஏற்று ஆசீர்வதித்த போது, பார்வை இழந்த நிலையில் புண்ணாகி விட்ட கோர தோற்றமுடன் ஸ்ரீவத்சன் என்பவனும், பிள்ளைலோகாச்சார்யாரும் தேசிகன் எதிரில் வந்தனர். ஸ்ரீவத்சன் தடுமாறியபடியே வேதாந்த தேசிகன் காலில் விழலானான்.
அவனைத் தொட்டுத் துாக்கிய தேசிகர் அவனது ரத்தம் கசியும் கண்களைப் பார்த்தார்.
''மகாத்மாவே... இவன் அரங்கனுக்காக கண்களை இழந்தவன். இவனைத் தாங்கள் ரட்சிப்பதோடு இன்றிரவு இந்த திருவரங்கம் விட்டு எம்பெருமானோடு நான் வெளியேறிட தாங்கள் சகாயம் செய்திட வேண்டும்'' என்றார் பிள்ளைலோகாச்சார்யார்.
''நல்லது.. சுதர்சன மகா ஹோமத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். மற்றதெல்லாம் தானாய் நடக்கும்'' என்றார் தேசிகர்.