என்றும் அன்புடன் ஐபிசி வானொலி

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • என்றும் அன்புடன் ஐபிசி வானொலி

என்றும் அன்புடன் ஐபிசி வானொலி என்றும் அன்புடன் ஐபிசி வானொலியில் நதுநசி

22/05/2025

மழையும் காதலும்
********************
கோடை காலம்
வெய்யில் அதிகம்.
ஆனாலும் மழை
பொழிய மறுக்கவில்லை.

வானம் கறுத்தது
காற்று குளிர்ந்தது.
கணப் பொழுதில்
கடும் மழை வந்தது.

எதிர் பாராத
இந்த மழையில்
நனைந்து போனவர்
பலருண்டு கண்டேன்.

காதலும் இந்த
மழையைப் போல்
வந்து போகிறது
நனைத்த படி இங்கே!

அதில் நனைந்தவர்
தோய்ந்து முழுகி
நீந்தி வந்ததாக நினைப்பு.
நனைந்தது மட்டுமே!

தோற்றுப் போகும்
காதலுக்கு இப்படி
நல்ல பெயரிருக்கும்.
மாற்றம் இதில் இல்லை.

அழுதிடும் காதலும்
அழுகிப் போகும்
மாம்பழமும் ஒன்றே
சுவைக்க முடியாது.

சோர்வை தூக்கி எறிந்து
வாழும் காதலும்
சவாலை எதிர்கொண்டு
நின்று கொள்ளும்.

தனக்கென்று ஒரு
தனிவழி கொள்ளும்.
தாகம் என்ற வழியில்
பசியாற்றத் தோன்றும்.

அடடா வந்தது
பெரும் மழை.
காலநிலை மாறியது
வானிலை கோபத்தால்.

காடிருந்தது நேற்று
கட்டிடக் காடாகி
கொதிக்கிறது இன்று.
காட்டுத் தீ கூடவே.

சாதியியல் அது போல
காதலை பற்றி
எரிந்து போகிறது.
என்று மாறுமோ இது.

ஆயிரம் ஆண்டுகளாக
தொடர்ந்து வருகிறது.
கொலைகள் நடந்தும்
கொஞ்சமும் மாறாது.

மழையும் மாறவில்லை
மதமும் மாறவில்லை
சாதியும் மாறவில்லை.
காதலும் கூட மாறவில்லை.

அங்கே ஊடாடி
வாழும் கோரமுகம்
மாறியதாக இல்லவே இல்லை.
மழையும் காதலும் கூட.

காற்றோடு கலந்து
மேனி வந்து மோதும்
ஈரமும் இருக்கின்றது
காதலில் காணலாம் எப்போதும்.

அனுபவித்து வாழ்ந்திட
வரம்புகள் கண்டு
கடந்திட நமக்கு வேண்டும்
தெரிந்திடத் தான் அறிவு.

பிரிந்து போகும் வரை
அறிந்து போகலாம்.
பிரிவை தவிர்த்து போக
தடைகள் அறிந்து போகலாம்.

மழையில் நனைந்து
கரங்கள் கோர்த்து
நீளமான பாதையில்
நடந்து பேசினால்

உடல் ஓடி ஆடை
நனைத்த மழையும்
காயும் தேகம் பட்டு
காதல் இதமாக வாழும்.

கனவுகள் நாளும்
வந்து போகும்.
மனதோடு மனது
கலந்து மகிழ்ந்திட.

வேற்றுமை விடுத்தொரு
வாழ்வு கிடைத்திங்கே
நாளை நலமாகும்
எண்ணம் ஈடேறும்.

காதலித்து கலியாணம்
செய்து விட்டுத் தான்
காதலை வைது கொண்டு
கோபம் காட்டுவார்கள்.

பாசத்துக்கு முன்னே
பரவசம் அடைந்து
பரபரப்பாகி தேடுவார்
காரணங்கள் பல.

காதலை அடியோடு
வெறுத்து நடப்பதாக
காட்டிய காட்சிகள்
காடாசி போன பின்னர்.

ஏமாற்றம் ஒன்று வந்திட
அதனால் கெடுத்தாரிங்கே
கொடுப்பதில்லை இழப்பு
மன்னிக்க கேட்டுத் தான்.

அவருக்கென்ன இங்கே
அவர் மனமொன்றும்
புண் பட்டதில்லை.
அவர் செயலால் இங்கே.

அதனால் அவர்
கடந்து போவார் அப்போது.
மழை போட்ட வெள்ளமாக
வம்பு செய்வது யாரோ?

நீரோடும் பாதையில்
கட்டிய மதிலும்
மாடி வீடும் சேர்ந்து
போட வைக்கும் வெள்ளம்.

மாரியில் மழையில் மூழ்கிய
நிலங்கள் மூழ்கிறது
கோடை மழையிலும்
இப்போது இங்கே கண்டேன்.

தானாய் பூக்கும்
காதல் பூவின் இதழுடைத்து
சேதம் செய்து போகும்
சொந்தம் படட்டும் பாடு.

வெந்த புண்ணில்
பாயும் வேலின் வலி
பட்டால் புரியும் நன்றே.
ஒருமுறை பட வேண்டும்.

மழையை மாற்றிய
வானிலை போல்
காலநிலையை மாற்றிய
வானிலை போல்.

காதலை மாற்றி
மடைபோட்டு வாழும்
மனிதரை என்னவென்பது.
மனிதருள் பூக்கும் பூ.

சிறுதுளி வெள்ளம்
காட்டாறாகி கடல் சேர
சின்ன சின்ன ஆசைகள்
சேர்த்து காதல் தோன்றும்.

சாகரம் போலாகிய
காதல் தேசத்தில்
வாழ்ந்திட பொருந்தும்
மழைக்கால தூறல்.

ஏற்றம் இறக்கம்
தேவையில்லை இங்கே.
வாழும் வகைக்கு வசதி
அது வேண்டும் கட்டாயம்.

இனியென்ன தடையுண்டு
காற்றில் பறந்து போக.
வாழ்வை காதலோடும் நீ
மழையோடும் வாழ்ந்து போ......... அன்புடன் நதுநசி
(W20.05.2025:1315)

22/05/2025

மாறாத அன்புடன்
********************
மறந்திட முடியாத
மகத்தான உறவு நீ.
மாறாத அன்புடன்
தொடர்ந்திட வேண்டும்.

ஆண்டுகள் பல
கடந்த போதும் எனக்கு
மறந்திட முடியாத
அன்புள்ளம் நீ.

நினைத்திட மட்டும்
நீ எனக்கு
உறவல்ல அன்பே!
உன்னை பூசித்திடுவேன்.

உன் உணர்வுகள்
நித்தம் என்னை
பசியூட்டி போக
நினைக்கிறேன் உன்னை.

எனக்காக மட்டுமே
வாழ்ந்து விட்டு போக
விரும்பிய உன்னை
மறந்திட முடியாது.

மாண்பு மிக்க
மண்ணில் நான்
மனிதனாக வாழ்ந்து
மகிழ்ந்து விட வந்தாய்.

அன்புக்காக ஏங்கிய
அன்றைய நாட்களில்
எனக்காகவும் ஒருத்தி
இருக்கிறாள் என்றாய்.

உணர்வுகளால் நான்
உணர்ந்து கொள்ளாத
மரத்துப் போயிருந்த - என்
உணர்வுகள் உயிர்த்தன.

தேனூறி வாழும்
பூவொன்றிடம் போய்
இனிப்பு பற்றி பேசல்
வேடிக்கை அன்றோ?

அன்போடு அன்பாய்
கலந்து வாழும் உனக்கு
அன்பின் ஏக்கம்
எப்படி புரிந்ததோ?

ஆனாலும் புரிந்தது.
எனக்குள் மாற்றம்
அது தந்து போனது.
மாறாத அன்புடன்.

ஆயிரம் உறவுகள்
அர்த்தங்கள் பல தந்து
அழகாக இருந்து போகலாம்.
அவையும் எனக்காக.

ஆனாலும் பார்
அவர்களுக்கு எல்லாம்
அவர்களோடு கலந்து
அவர்களுக்காகவே வாழும்.

எனக்கு உன்னைப் போல்.
அழகிய உறவொன்று உண்டு.
அழுவதும் சிரிப்பதும்
மனதுக்குள் என்றால்.

அவர்கள் எல்லாம்
அதையெல்லாம் பகிர
ஓடிப் போகிறார்
அந்த அழகிய உறைவிடம்.

பெருங் காட்டிலும்
அடர்ந்த மரங்ளோடு
பலமுறை பேசியிருக்கிறேன்.
அவை கூட தலையசைக்க.

சிறகசைத்து வரும்
பறவைகளும் கூட
ஊர்ந்து வரும் அந்த
பாம்புகளோடும் கூட.

பலமுறை நான்
அந்த கானகத்து நிலத்தில்
படர்ந்து கிடந்து இருக்கிறேன்.
அவை அசைந்து போக.

சருகில் கூட
செருகி இருந்திருக்கும்
விசப்பூச்சிகள் கூட
அலரை செய்து போக.

எதிரிக் குகையில்
நான் இருந்த இடங்கள்
அமைதியின் உச்சம்
பெற்றிட நகர்ந்திடுவேன்.

அவை தந்திடாத - ஒரு
பேரமைதியை நீ
தந்து போவதை நான்
உணர்ந்தேன் தெரியுமா?

என்னைச் சுற்றி வாழும்
ஆயிரம் உறவுகளிலும்.
அவர்கள் தந்து போகும்
தேற்றல் உன் போல் இருக்காது.

நான் அழும் முன்னே
கண்கலங்கிய நேரம்
பலதுண்டு கண்டேன்.
என் துன்பம் நீ கண்டு.

எனக்குள் ஆச்சரியம்
அது கண்டு.
எனக்காகவா இவள்
இத்தனையும் செய்கிறாள்.

அத்துணை ஆர்வம்
அவளுக்கு இருக்கிறது
என் மீதென்று எனக்கு
வியப்பு மேலிட்டது.

காதல் தான் ஆரம்பம்
இப்போது அது
அதையும் கடந்து சென்றது.
அன்பின் அரவணைப்பில்.

ஆற்றல் உள்ளவள்
அடங்கிப் போகிறாள்.
அதிகாரம் இல்லாத
பொழு தொன்றிலும்.

தவித்திடும் போது
தாங்கிய என்னவள்
மாறாத அன்புடன்
மடி தூங்கும் அழகில்

நான் என்னை
அவளிடம் இழந்து
என்னை நான்
மறந்து விடுகிறேன்.

நினைவுகளுக்கே இன்று
அதிகாரம் அதிகம்.
அவை ஆண்டு கொள்ள
அடிமையாகி போகிறேன்.

என்னோடு எனக்குள்
கலந்து கொண்டு
மகிழ்ந்து தான் அவள்
வாழ்ந்து கொண்டிருந்தாள்.

வயதாகிடாத விடலை
விடுதலைக் கனவனோடு
பலமுறை படை சென்றும்
வீடு திரும்பி வந்தவள்.

குண்டு மழையில்
பலமுறை நனைந்தும்
மீண்டு வந்த எனக்கு
இன்றளவும் பதிலில்லை.

அழகான துடிப்புள்ள
அறிவுள்ள ஆற்றலுள்ள
அவளுக்கு மட்டும் ஏன்
இப்படி நடந்தது ?

ஆறாடி கூந்தலும் - அதன்
கருமேக நிறமும் கூடவே
பட்டொளி தேகமும்
அவளுக்கு இருந்தது.

அவள் ஒன்றும்
கற்பனைச் சிலையில்லை.
உயிருள்ள தேகம்
ஊசலாடும் உடலவள்.

ஒற்றை குண்டுத் துண்டு
கொதித்தபடி வந்து
அவள் உடல் புதைந்து
புண்ணாக்கிப் போனது.

கொதித்துப் போனேன்.
அப்போதும் அவள்
என் தோள் சாய்ந்து தான்
கண்ணயர்ந்து இருந்தாள்.

விழி திறந்து
வாய் மலர்ந்து அவள்
ஒரு முனகல் கூட
இல்லாது போய்விட்டாள்.

மூடிய விழிகள்
இறுதிவரை திறக்கவே
இல்லை. இல்லை.
கண்கள் எனக்கு கசிகிறது.

இன்றளவும் அவளுக்காக
கசிந்த கண்ணீர்
காய மறுக்கிறதோ
எப்போதும் விழியடி ஈரமாக.

மாறாத அன்புடன்
மாற்றமில்லாத என்
எண்ணங்கள் அவளோடு.
முள்ளிவாய்க்கால் மண்ணில்.

மலர்தூவி அவளை
வணங்கிட தகுந்தும் - எனக்கு
மலர் தாங்கிய என்
கரங்கள் சோர்ந்து விழ.

கண்கள் பெருக்கெடுத்து
பாய்ந்தோடும் பேராறாகிட
ஓவென பேரோலம் இட்டு
உரத்து கத்திடத் தோன்றியது.

என்னைப் போல் பலர்
முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
வாய்விட்டு அழுதபடி
இருந்திட கண்டும் நான்.

உள்ளூர உந்திய - என்
உணர்வுகளை கட்டி வைத்து
அமைதியாகவே நின்று
எனக்குள் அழுது கொண்டேன்.

அவள் மீதான என்
அன்பும் மாறிடவில்லை.
மாறிடாத அன்புடன்
அவளை தினம் நினைத்தபடி.

என்னுள் இருக்கும்
இயல்புகளும் மாறிடாத
வாழ்வொன்றோடு நான்
நடந்து கொண்டிருக்கிறேன்......... அன்புடன் நதுநசி
(W19.05.2025:0917)

22/05/2025

உன்னை தேடும்
விழிகள்
*********
சூரியனின் கதிர்கள்
எட்டிப் பார்த்தன.
ஏக்கத்தோடு படுத்திருந்த
என்னவளின் முகத்தை.

அமைதியாகவே அது
போர்வை மூடிய
உடலோடு பொருந்தி
கண்கள் மூடி கிடந்தது.

கட்டியிருந்த கூந்தல்
அவிழ்ந்து பரவியிருக்க
தலையணை முழுக்க
வேரோடி அது இருந்தது.

இன்னும் எழுந்திருக்காத
அவள் என்ன நினைத்து
இன்னும் தூங்கிக் கொண்டு
அமைதியாக இருக்கிறாள்.

அலைகடல் தழுவிடும்
கரைவழியால் அவள்
நடந்திடும் நேரத்தில்
நீர் கழுவி பாதம் வருடும்.

மணல் ஓடி விளையாடும்
நீண்டும் வளையோடி
மறைந்து கொள்ளும் போது
கைவிட்டு வளை பிரிப்பாள்.

கொடுக்குடைந்த நண்டு
துடிதுடித்து வரும்
அவள் விரல் பிடியில்
சிக்கிக்கொண்டு தொங்கும்.

கடல் நண்டு என்று - அவளிடம்
சொன்னாலும் அவள் - அது
மணல் நண்டு என்று
வாயடித்து வென்றிடுவாள்.

கடற்குருவி வந்து - அவள்
தலைமோதி போகையில்.
தன் தலை கொத்தி போனதாய்
உரக்க கத்திக் கொள்வாள்.

எப்படி சொன்னாலும்
தன் சொற்படி நடந்திடவே
வற்புறுத்திக் கொள்வாள்.
அவள் அப்படித்தான்.

எரிந்து விழும் அந்த
வானத்துக்கல் காண்டு
வாயாடி வந்து நிற்பாள்
அது என்ன என்று கேட்டு.

கயல் மீனைப் போல்
அவள் கண்கள் நீண்டு
இமைபரப்பி கொண்டன;
என்னை கவர்ந்து போக.

ஒட்டி மீனைப் போல்
நீண்டு வளர்ந்து அவள்
மெலிந்த மேனி கொண்டவள்.
பார்வைக்கு பேரழகி அவள்.

திட்டுக்கள் திகட்டும்.
அவள் மொட்டுக்கள் மலர.
பட்டுக்கள் போர்த்தி அவள்
மேனி சூட்டும் ஆடைகள்.

ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
அவள் மீது பிறக்கும்.
அவளைத் தேடிடும் பாசத்தில்
பரவசம் பொங்கி வழியும்.

பனங்குருத்தும் அவள்
தென்னங் குருத்துவம்
சுவைத்து உண்ணும்
ஆசையில் திமிரெடுப்பாள்.

அந்த திமிரில் நான்
அடங்கிப் போகும் - அந்த
நொடிகளில் தான் - அவள்
இன்னும் பேரழகியாக இருப்பாள்.

உற்று நோக்கி மேனி
பற்றிக் கொள்ளும் ஆசை.
வருடி மேனி ஓடும் - என்
கையும் ஆடும் நாட்டியம்.

என்னவோ எல்லாம்
அவளை காணும் போது
ஆகிப்போகும் என்னுள்.
அழகான மாற்றங்கள் அவை.

அதனால் தானோ
நித்தமும் தேடுகிறது.
என் விழிகள் உன்னை
நலமென்று காணும் வண்ணம்.

உன்னைத் தேடும்
என் விழிகள்.
களைத்து இமை மூடி
தூங்கி போகும் முன்

உன்னையும் காணுமோ
எண்ணும் முன்
தோன்றி வந்து நீயும்
காட்சி தந்து நிற்காயோ?....... அன்புடன் நதுநசி
(W17.05.2025:1309)

22/05/2025

அந்த நாள்
மீண்டும் வேண்டாம்
***********************
ஐயகோ!
அந்த நாள்
மீண்டும் வேண்டாம்.
தமிழர் எமக்கு.

அழுது வடித்து
காய்ந்து போனது
எங்கள் கண்ணீர்
சுரப்பிகள் இரண்டும்.

கண்கள் கூட
வறண்டு போக
வெப்பம் கூடி அது
சிவந்து போனது.

தூக்கம் கூட
வர மறுத்து
குறைந்து போகிறது.
அதற்கு கூட.

தமிழர் எம்மிடம்
விருப்பம் இல்லை.
போரில் சிக்கி
தவித்த எம்மிடம்.

எல்லாம் இழந்து
உடலோடு உயிர்
மட்டும் மிச்சமாக
தப்பித்து விட்டோம்.

இன்றைய நாளில்
அன்றைய நாள்
எமக்கொரு வரமாக
மரணம் வந்திருக்கலாம்.

இருந்தும் நாம்
தப்பித்து விட்டோம்.
இனியொரு நாள்
அதுபோல் வேண்டாம்.

ஐந்து வயது கூட
நிரம்பி இருக்காது.
ஐந்தாறு தடவை
காயம் பட்டு விட்டான்.

எத்தனை தடவை
அந்த பிஞ்சு உடலில்
மருந்திட்டுக் கொள்வது.
அழுகை மறந்து விட்டான்.

ஆடை கிழிந்து
உள்ளுடலின் பாகம்
பலது தெரிகிறது.
இருந்தும் அமைதியாக.

மானம் பெரிதென்று
உடல் அசைத்து
ஆடை சீர் செய்ய
முடியாத துயரம் அவளுக்கு.

இரு கைகளையும்
சிதைத்து விட்டிருந்தது.
போரில் வெடித்த
எந்தக் குண்டோ?

முழங்கை இருக்கிறது.
மணிக்கட்டோடு விரல்கள்
காணவில்லை அவளிடம்
இரத்தம் சிந்த வந்தாள்.

மனதை கல்லாக்கிய
கையை வெட்டி
மருந்தை இடாது விட்டு
துணியை சுற்றி கட்டி.

மருந்து இல்லாத
அந்த வேளையில்
வேதனை என்னை
வைத்துக் கொண்டது.

அவளுக்கு காலும்
காயம் பட்டு
இப்போது தான்
மாறிக் கொள்கிறது.

கட்டில் இல்லாத
தரைப்பால் தரை
அவள் கிடந்திருந்தாள்
அசைவற்று ஈ மொய்க்க.

உடலில் உயிர்
இருக்கிறது உண்மை.
உணர்வற்று அவை
மரத்து போயிருந்தன.

இப்படி ஒரு நாள்
இன்னுமொரு நாளாக
வேண்டாம் எமக்கு
இனியொரு நாளில்.

பலர் இறந்து கிடக்க
கடந்து சொன்ற
உணர்வின் வலி
வேண்டாம் இனியும்.

உடலில் உயிர்
இல்லை என்பது
நன்றே தெரியும்.
இருந்தும் அன்று.

கால்கள் நகர்ந்தன.
கனத்த மனத்தோடு.
மூன்று தசாப்த போரை
முடித்த விதம் கேவலம்.

இலங்கை மட்டுமல்ல
உலகமும் தான்.
அது கூட பரவாயில்லை
எங்கள் உறவுகளும்.

மெத்தனம் காட்டி
வந்தனம் சொல்லி
வரவேற்று கொண்டன.
கந்தக காற்று மீட்டவரை.

கண்ணில் பட்ட
குண்டின் துண்டு
காயம் தந்து கொள்ள
புழுவும் பிடித்தது.

நடந்து வந்த போது
கால் சோர்ந்து
நிலம் விழுந்து மடிந்த
வயோதிபர் பலர்.

இரண்டு கால்களும்
முழங்காலுக்கு கீழே
துண்டாகி போய்விட
கேட்டேன் குருதி.

உண்ண உணவு
இல்லாது வாழும்
அந்த நேரத்திலும்
கோரல்கள் இப்படி.

அதிக குருதி ஓடி
உடல் சோர்ந்து போக
உயிர் பிடித்து நிறுத்தி
அவசரம் வேண்டும் குருதி.

அடுத்தடுத்து மூன்று
தடவைகள் தந்தவர்
அவர்கள் மனிதரன்று
மகான்கள் என்பேன்.

கூரை இருந்து இப்போது
வானம் கூரையாகி
இடப்பெயர்வு நடந்தது.
கரைதெரியா பாநிலத்தில்.

உண்டு குடித்து
எழுந்து இருந்து கிடந்தால்
இப்போது போதும்.
நாளை முடிவு வரும்.

வந்த முடிவு
எதிர் மாறாகவே
இருந்து விட்டது.
எல்லாம் முடிந்து.

நேற்றைய நிகழ்வை
மறந்து நடந்திட
விரும்பிய போதும்
நினைவுகள் வலியவை.

முடியாது போகையில்
முடிந்து போகிறேன்
ஒவ்வொரு நொடியும்
வீண் என்று நினைத்து.

அழுதழுது நாம்
ஆண்ட நிலத்தை இழந்து
தலைமை இல்லாத
ஏதிலிகளாக இன்று.

இருந்ததை தொலைத்து
புதியதை ஏற்பதற்கு
எங்கள் வழியின்
அடுத்த தலைமுறையும்

மறுத்து விடுகிறது.
பிறக்கும் முன்னே
இறந்தவரை நினைக்கும்
இளைய வரும் கூட.

ஐயகோ
நினைவு நீண்டு போக
மனம் கனத்து வலிக்க
துயரம் சூழ்ந்து போகிறது.

பட்டவற்றை நான்
சொல்லிக் கொண்டு போக
ஈற்றில் நான் என்னை
இழந்து விடுவேன்.

நிச்சயம் இது
என்பது உண்மை.
இனியொரு நாளை
எதிர்க்க திடம் வேண்டும்........ அன்புடன் நதுநசி
(W14.05.2025:1207)

22/05/2025

மறப்பேனா
**************
மறைக்கப்பட்ட எம்
இனத்தின் உண்மைகள்.
மறந்து விடுமளவுக்கு
மறைக்கப்பட்டு வருகின்றன.

திட்டமிட்டு பல
இடங்களின் இருப்பு
இல்லாமல் ஆக்கப்பட
பெயரும் உருமாறி போகிறது.

மெல்ல மெல்ல இவை
எதிர்ப்பு இன்றி நடக்கிறது.
எண்ணத்தில் குழப்பம்
எழுவதை தடுத்து விட்டு.

தமிழரிடையே இருக்கும்
பிரிவினை இதற்கு
உரமாகிப் போகிறது.- நாளை
இனமழிந்து போய் விடும்.

நேற்று தமிழாய் இருந்து
அழைத்த இடத்தை
இன்று சிங்களத்தில்
அழைத்து போகிறார் தமிழர்.

அவர்களை யாரும்
நிர்ப்பந்திக்க இல்லை.
ஆனாலும் அதனை அவர்கள்
அப்படியே மாறாமல் செய்கிறார்.

தமிழராய் பிறந்து
தமிழைப் பேசி வாழ்ந்து
தரணி போற்ற வாழும்
வழிகள் மறந்து போனதால்.

ஆங்கிலத்தில் பேசினால்
ஆங்கிலம் இடையே கலந்து
அதில் தமிழை இடை செருகி
பேசிடல் பெருமை மிக்க தாம்.

அவர்தான் அறிஞராம்
அவர் தான் கல்வியலாளராம்.
அவர் உயர்ந்த மனிதராம்.
அப்படி பேசினால் தான்.....

தரங்கெட்ட மனிதரிவர்கள்
தமக்கென்று அடையாளம்
இழந்து விட்ட அநாதைகள்.
பிறகெப்படி இனமாவார்கள்

பால்குடி மறவாத
பச்சிளம் பிள்ளையும்
இப்படி கேட்கத் தெளியும்.
அறிவுடைய இந்ந உலகில்

இன்றளவும் இதுவறியா
இனமொன்றாய் ஈழத்தமிழர்
வாழ்ந்து போகிறார்.
இது பெரும் வேடிக்கை.

உலகில் பல நாட்டில்
தமிழர் வாழ்கிறார்.
இன்றும் தங்கள் அடையாளம்
இழந்து விடாத இனமொன்றாய்.

நாணயத் தாளில்
தமிழ் இலக்கம் இருக்கிறது.
மொரிசீயஸ் தீவுகளில்.
பிரான்சின் காலனித்துவத்தில்.

சிங்கப்பூரின் சனாதிபதியாக
தமிழர் ஒருவர் இருந்திட.
உலகில் ஈழத்தமிழர்
வாழ்வு மட்டும் சிதறி போக.

அவர் தமக்குள்
தனித்து வாழ்ந்தும்
சேர்ந்து வாழ்ந்தும் வாழும்
வாழ்க்கை முறை மறந்தார்.

வாழும் நாட்டின்
அரசை பழித்தார்.
அந்த அரசின் அரசாங்கம்
செய்யும் அட்டூழியம் ஏற்றார்.

எதிர்த்து நின்றவர்
வாழ்வை சிதைத்தார்.
தனி ஈழத்தமிழர்
என்றான போதும்

எதிர்ப்பொன்றை தனித்து
எதிர்த்து விட்டு
மறைவில் கூடி நின்று
தோழமை செய்கிறார்.

அரச பணியாளருக்கு
கட்டாயம் சிங்களம்
தெரிந்திருக வேண்டும்.
தெரிவிக்க பட்டது அப்படி.

அந்த வழி சென்று
சிங்கள மொழி கற்று
தேறிவிட்ட தமிழர்
சொல்கிறார் கதை.

இதனால் இனி இல்லை
நாட்டில் வன்முறை.
ஆனாலும் நாளும் நடக்கிறது.
அமைதி கெடுத்தொரு செயல்.

மொழி தெரிந்தால் - அது
புரிந்து கொண்டிட
மானிடப் பண்பு கூடும்
அந்த வழி இனி போரில்லை.

ஆனாலும் நாளும்
நாட்டில் நடக்கிறது.
வாள் வெட்டும் கூடவே
தூற்றி மானம் கெடுத்து
கொச்சை சொல்லி போதலும்.

அரச புலனாய்வாளர்
கைங்கரியம் இவையென்று
ஒரு சாரார் பேசிட
மறு சாரார் காட்டிக் கொடுக்கிறார்.

அரச பணி வேண்டும்.
ஆழாமாக படித்து
பணம் நிரந்தரமாக வர
நல்ல பணி தேடி கொள்கிறார்.

ஓய்வூதியம் வருவதை
நிச்சயப்படுத்தி கொண்டு
மூச்சாறி பெருமூச்சு வீசி
நிம்மதி கொள்கிறார்.

தம் பிள்ளைகளை
நல்ல படிப்பில் இருத்தி
குடும்ப நலனும் எதிர்காலமும்
நன்றே அமைந்திட செய்கிறார்.

அப்பப்போது வீதிக்கு வந்து
தமிழ் தேசியம் பேசி
ஏழைகளை தூண்டி விட்டு
ஓடிப் போய் மறைகிறார்.

ஈழத்தின் விடுதலை
யாருக்கிங்கே வேண்டும்.
உணர்ச்சி வசப்பட்டு
வீரா வேசம் யார் பேசுகிறார்

தமிழ் அரச பணியாளர்
சிங்களம் பற்றிட வேண்டும்.
அது போல் சிங்களவரும்
கற்றிட வேண்டும் தமிழ்.

இதை வலியுறுத்தி
வாதடிப் போக மட்டும்
மறந்து போவதெனோ?
சமமென்றால் இதுவல்லவா?

நமக்கெதற்கு வீண் வம்பு
நம்பாடு நல்லபடி நடந்திட
நமக்கு வருகிறது கூலி.
பிறகெதற்கு இங்கே கேலி.

ஆனாலும் இத்தகையவர்
பேச்சில் அறிந்த உண்மை
வீச்சில் வீரம் காட்டி
வாழ்ந்து போதல் பாவமல்லோ?

மீண்டும் மீண்டும் துயரில்
சிக்கிக்கொண்டு பலர்
இன்னல்கள் கண்ட பின்னும்
அதை மறந்து உடன் வாழ்கிறார்

விடுதலை மூச்சோடு
உணர்வின் வெளிப்பாட்டோடு
விடுதலைக்காக போராடி
வீரச்சாவடைந்தோர் பலர்.

அவரிடையே இங்கே சிலர்
தம்மிலும் மேலொரு வீரர்
இல்லை என்ற கதை விட்டு
விடுதலை பேசி போகிறார்.

அன்றும் சரி இங்கே
இன்றும் சரி.
உணர்வு வழி உரிமை
கேட்டு நிற்போர் சிலரே!

அவரே இங்கே தமிழர்
அறிவின் பெரு தெளிவர்.
உலகை புரிந்து நடந்து
அரசியல் தெரிந்து கொண்டவர்.

அரசின் கூலிக்கு அரசுக்கு
கடமையாற்றி விட்டு - அவர்
அந்த அரசை தவறென்று
சொன்னால் எங்கே தவறு.

கேட்டுப் போகும் வீரர்
அவர் வீரர் இல்லை வீணர்.
நீதி வழி போராடி
உண்மை வழி வாழ வேண்டும்.

இந்த திமிரும் இல்லை
தமிழர் விடுதலை பேசும்
தமிழர்களிடையே என்றால்
வெள்ளிடை மலையிது.

கள்ளர் போலொரு
கோலம் போட்டு
தம் வாழ்வுக்கு வழி தேடி
அந்த வழி தந்த வரை.

ஆக்கிரமிப்பாளர் என்றும்
அட்டூழியக் காரர்
அந்நியர் என்றும் சொல்லி
விழிப்பது தான் எதற்கு?

தன்னினத்தின் மனிதன்
சிதைக்கப்பட்டு போக
அவனை காத்திட எண்ணி
நடந்திட நினைத்தது இல்லை.

அந்நியரிடம் கூலி வாங்கி
வயிறு நிரப்பிட முடியும்.
அந்நியர் செய்யும் அநியாயமும்
கூலி போல் இவருக்கும் பங்குண்டு.

திமிருள்ள உணர்வுள்ள
தமிழர் என்றால்
ஆக்கிரமிப்பாளனிடம் ஏன்
இன்றும் கையேந்தி கூலி.

எல்லாம் விடுத்து விட்டு
கற்று வந்த அறிவை கொண்டு
செய்திடல் வேண்டும்
சுயமாக தொழில் ஒன்று.

அரசு வாங்கிட வேண்டும்
தன் செலவுக்கு பணம் - இனி
எம்மிடம் என்று வாழ்ந்தால்
முள்ளிவாய்க்கால் பெருமை பெறும்.

இவையெல்லாம் மறந்திட
முடியாத சிந்தனை எனக்கு.
மறப்பேனா நான் இவை.
கனக்கிறது மனதெனக்கு........ அன்புடன் நதுநசி.
(W12.05.2025:1931)

22/05/2025

என்னதான் பேசுவதோ?
***************************
ஏக்கங்கள் நிறைந்த
வாழ்வில் இருந்து
என்னதான் எம்மால்
பேசிக் கொள்ள முடியும்.?

ஆண்டுகள் பதினாறு
கடந்து விட்டது தான்.
ஆனாலும் இன்னமும்
நாங்கள் மாறவில்லை.

நாட்டுப் பற்றிலும்
நாம் தமிழர் என்ற
உணர்விலும் கூடவே.
நாம் அடிமைகள் இல்லை.

கால்கள் தொலைந்த
கானகத்திலும் கூட
நாட்கள் நீண்டும் நம்மவர்
மீண்டு வந்த கதைகள் உண்டு.

காதலும் கொஞ்சும்
கலைத் தேசத்தில் தான்
வீரம் விளையாடிய மண்ணில்
நாங்கள் வாழ்ந்திருந்தோம்.

எட்டப்பர்கள் போல்
எப்படியும் வாழலாம்.- இப்படி
எண்ணம் இல்லை
எப்போதும் எம்மிடம் தான்.

வீழ்ந்த போதும் நாம்
நிலம் மோதி வெடிப்போம்.
கிட்ட வந்து எம்மை
அசைத்தாலும் கூட நடக்கும்.

ஆனாலும் அன்று
எல்லாம் கனவாகி போனது.
இறுதி வரையிலும் அன்று
நம்பிக்கை இருந்தது.

ஏதோ ஒரு வழி
நமக்கு இருக்கும் என்று.
இறுதி வரையிலும்:. - எந்த
வழியும் இருக்கவில்லை.

இறந்தவர் உடல்களை
காற்றில் மணக்க விட்டு
காயவரோடு கலந்தோம்.
மனது வலித்துக்கொள்ள

தேடி வைத்த சொத்துக்கள்
சேதமாகி போனது.
விட்டுப் போனவை எல்லாம்
வந்து பார்க்க எதுவுமில்லை.

கூடு அடைந்த பறவைகள்
குண்டடி பட்டு அன்று
சிறகுடைந்து கிடந்தன
குற்றுயிராக ஈழத்தில்.

பட்டிக்கு திரும்பி வந்த
மந்தைகள் மீண்டும்
போகவில்லை மேய்ச்சலுக்கு.
மோட்சம் பட்டியில் கிடைத்தது

பாசம் வைத்து
குழைந்து வாழ்ந்தவர்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
திசை மாறி அலைந்து கொள்ள.

என்னதான் பேசுவதோ
எங்களைப் பற்றி நாம்.
எப்போதேனும் தான் நாம்
நம்மை மறந்து சிரித்தோம்.

நட்டு வைத்த வாழை
குலை போடும் முன்னே
குறுக்கறுத்து வீசிட
துண்டாகி இறந்து போனது.

நீண்டு வளர்ந்த
தென்னைகள் எல்லாம்
வட்டு இழந்து மொட்டையாகி
பட்டுப் போயின.

பனையும் காயம் பட்டு
பலமிழந்து முறிந்தது.
வட்டுவாகல் பனம் காடும்
வான் குண்டால் கருகியது.

முள்ளிவாய்க்கால் விடத்தல்
அதுவும் கசங்கி போனது.
அந்த முள்ளின் வெண்மை
கருமையாகிப் போனது.

பெரும் போரில்
தேடினும் கிடைக்காது
ஒரு நாயின் உடலும்.
மனித பிணங்களிடை.

அழிந்தவை போக
மிஞ்சியவை புத்திசாலிகள்.
சிதறிக் கிடந்த பிணங்கள்
கிழித்து அவை சுவைத்தன.

அம்மாவின் உடலை
காகம் கொத்தி தின்ன
அதன் முன்னே நான்
பதுங்கு குழியில் பயந்து.

வந்து விழுந்து வெடித்த
குண்டின் துண்டில்
எந்தன் உடலில் ஒன்றும்
காணாது போனது கண்டேன்.

இப்படி இன்னும்
என்னென்னவோ நான்
நிறையவே சொல்லுவேன்.
விழி கசிந்து மனமிறுகின்

மூச்சுத் திணறி
முதுகெலும்பு வலிக்க
மூர்ச்சை ஆகி போவேன்.- அது
இல்லையெனில் இன்னும்

வலிநிறைந்த கதைகள்
பல சொல்வேன்.
கேட்டு மனம் நொந்து
நீங்களும் அழுது விடுவீர்கள்.

இறந்த உடல்கள்
மெல்ல ஆடை இழக்க
ஈக்கள் மொய்த்து தான்
பேரம் பேசிக் கொண்டன.

உருமாறிய உடல்களை
கடந்து எங்கள் கால்கள்
பகை வீட்டினுள் தடம்
பதித்துக் கொண்டன.

பகை வீடென்று மனம்
பதிந்து கொண்டது
நாம் வாழ்ந்த அந்த
நிழல் அரசை துறந்ததால்

என்னதான் பேசுவதோ
எப்படித்தான் பேசுவதோ
மனம் நொந்து வெந்த பின்னும்
பேச்சு வந்து சேருமோ?

மூச்சு நின்று போனால்
முழு உடலும் விறைக்கும்
இறந்து போன பின்னும்
எழுந்து வந்து பேசும்.

என்னதான் பேசுவதோ
இப்படி முரண் கொண்டு
எதை நான் சொல்லவோ?
ஆனாலும் உண்மை.

முள்ளிவாய்க்கால் மண்
இனவழிப்பின் உச்சம்.
முடிந்தளவுக்கு கொன்றனர்.
குவிக்க மறந்து விட்டனர்.

ஊணம் தந்து விட்டு
ஊட்டி வளர்ந்தேன்
என்று வந்து நமக்கு
ஆறுதல் பேசி பயன் என்ன?

உலகை ஏமாற்றி
உலகம் நம்மை ஏமாற்றி
கூட்டுக் கள்ளர் செய்த
கொள்ளை ஈழமழிந்தது.

இனியொரு முறை
இதுபோல் ஒரு நிகழ்வு
நடந்தேறி விடாது
தடுத்திட இல்லை வழிகள்

புலியை வென்றால் - அது
புதுமை என்றால்
அவர் போலன்றி ஒரு
பேயர் இருக்கார் உலகில்.

இன விடுதலைப் போர்
இனவழிப்பாக முடிந்தது.
விடுதலை கேட்டு போராடிய
காரணம் இன்னும் மறையவில்லை.

உலக அரசியல்
நிரலில் நாங்கள் அநாதைகள்.
புரிந்தது நமக்கின்று
முள்ளிவாய்க்கால் மண்ணால்.

இன்றும் எதுவும் இல்லை
இளையவர் கூட
அதையின்னும் அறியவில்லை
எண்ணுகையில் கண் கசிகிறது.

நெஞ்சம் பிழிந்து
இரத்தம் வடிந்து
உடல் காய்ந்து போகிறது
வலிக்க மறந்து மரத்ததால்.

நாளைய தேசத்தில்
ஏமாறிகளாக நம்மவர்.
உருமாறிக் கொண்டு
நற்சான்று கொடுப்பார்கள்.

நேற்று நடந்ததை
அறியாதது தவறென்று
பட்ட பின் தெரிந்து
உள்ளம் நொந்து கொள்வார்கள்........ அன்புடன் நதுநசி.
(W11.05.2025:1907)

22/05/2025

முதல் சந்திப்பு
*****************
முத்தம் பற்றிய
காமம் இல்லாத
வயதில் தான் நான்
அவளை முதலில் கண்டேன்.

அவள் தான் - தன்
பெண்மை மிஞ்சிய
வயதில் அவள்
மென்மை கொஞ்சினாள்.

என்னை என்னவோ
செய்து கொண்டாள்.
அது மட்டும் தான்
நினைவிருக்கிறது எனக்கு.

அப்போது எல்லாம்
காதல் அனுபவம்
அவளுக்குத் தான் அதிகம்.
நான் அதில் கற்றுக்குட்டி.

ஆனாலும் பாருங்கள்
என்னை விட அவள்
நாலு வயதில் குறைந்த
பேரழகுப் பெண்ணவள்.

முன்னழகு முட்டி வளர்ந்து
கவர்ந்து கொள்ளும்.- அவளுக்கு
இடையும் ஒடிந்து மெல்ல
இடுப்பை காட்டி நின்றது.

அவளை பார்க்கும் போது
பார்த்துக் கொண்டே
இருந்திடத் தூண்டும்.
எனக்குள் ஏதோ நடக்கும்.

படைப்பில் எனக்கு
அவளை விட தெரியும் தான்.
தெரிந்து இருக்க வேண்டும்.
தெரிந்தும் இருக்கலாம்.

வளர்ந்த இடத்தில் நான்
வளர்ந்த முறை வேறு.
ஆடையில்லாமல் பெண்ணை
பார்த்தாலும் ஆகாது.

உள்ளத்தில் இருக்கும்
உணர்வுகள் சிலிர்க்காது.
உடலுள்ளூறும் இரசாயனமும்
கட்டுக்குள் இருந்து கொள்ளும்.

ஒரு உயிரின் மதிப்பு
பெரிதென்று வாழ்ந்து
நெஞ்சுக்குள்ளே ஈரமிருக்கும்
இரும்புறுதி மனிதர் போல்.

தொப்பிக்குள் எலிக்குஞ்சு
கண்டு இரங்கி - தொப்பி
எடுத்தணிய மறுத்து விட்டு
தண்டனை வந்து பெற்றவர்.

பலவீனமான இயக்கத்தின்
பலமான ஆயுதமாக
பூத்திருந்ந கரும்பூக்கள்
வழி வளர்ந்திருந்தேன் நான்.

எண்ணத்தில் எண்ணிய
எண்ணம் விட்டு
எனக்குள் வேறு இருக்காது.
பெண்ணை கண்ணென்று

ஏதோ ஒரு நாளில்
ஊரில் நடை போட்டேன்.
எந்த நாளென்று தெரிந்தும்
சொல்ல மனம் இல்லை இன்றும்.

அவளை கண்டேன்.
அவளுக்குள் இருக்கும்
பெண்மையை விட்டு.
அன்னையை மட்டும்.

ஆம். அந்த பெண்ணுள்
என்னைத் தாங்கிய
அன்பை கண்டேன்.
அன்னை போலறிந்து.

ஆனாலும் அவளை
இரசிக்க மறந்தது இல்லை.
அவளது தேகம் முழுக்க
உள்ளோடி நான்.

வளர்ந்த போதினில் எனக்குள்
இருந்த இனம் புரியாத - அந்த
உணர்வுகளுக்கு அவள்
இப்போதெல்லாம் விடையாக.

அவளாக வந்து என்னை
கற்றுத் தேற தூண்டி
காதல் தந்து நின்றாள்.
அந்த முதல் சந்திப்பில்.

நாட்கள் ஓடி
மறைத்து வந்த கோலம்
அது போலாகி வாழ
அதிகம் பழகி போனாள்.

பழக்கம் கனிந்து
அவளுக்குள் அது
காதலாகி போயிருக்க
கனிந்து கொண்டாள் அவள்.

என்னைக் கொண்டு
தன்னை புடம் போட்டாள்.
என்னோடு வாழ்ந்திடவும்
திடம் கொண்டு விட்டாள்.

நான் தான் அவளை
இன்னும் ஆழம் போய்
அறிய மறந்து விட்டேன்.
அழகானவள் மனதுக்கு.

என்னோடு எப்போதும்
இருப்பேன் என்றாள்.
எப்படி உன்னால் முடியும்
என்று கேள்வி கேட்டேன்.

சட்டென சொன்னால்
பட்டென இருந்தது எனக்கு.
இப்படி ஒரு சூழலை
எதிர் பார்த்தது இல்லை.

எனக்கும் ஒரு சொந்தம்
இப்படி இருக்குமென்று
எண்ணிப் பார்த்தது இல்லை.
இப்போது இருந்து விட்டது

இந்த முதல் சந்திப்பை
சாகும் வரை நான்
மறந்தது இல்லை என்றும்.
ஆனால் அவள் மட்டும்.

காரிருள் பரவிய
கடும் போரிடையில்
வீசிய காந்தக காற்றில்
கலந்தும் மீண்டு விட்டேன்.

அவளை அந்தக் காற்று
கருக்கி போய்விட்டது.
வெண்ணிற மேனியவள்
கருகிக் கிடந்தாள் அன்று

கண்கள் கசிந்து கொள்ள
இன்றும் வாயடைத்து நான்
போகின்றேன் நிலைகுலைந்து.
மூச்சு முட்டி விட்டு விட.

கடந்து போன காலம்
கவலை தந்து போகிறது.
இனிமையாக இருந்தும்
அழுதிட தோன்றுகிறது.

ஆற்றில் வாழும் மீனும்
அழுத்திடத் தெரியாது.
கடும் குளிர் காலத்திலும்
தவளை நடுங்கிடத் தெரியாது.

முதலைக்கும் பசிக்கும்
ஆனைக்கும் பசிக்கும்.
இங்கே காதல் வந்து
சந்தித்துக் கொண்டாலும்.

நித்தம் நித்தம் முத்தம் கூட
பசிக்கும் கண்டேன்.
இரும்புருக்கு நெஞ்சிலும்
காதல் பூக்கள் பூத்திட

என்ன பாவமோ
பூத்த பூக்கள் எப்போதும்
காய்த்தது இல்லை.
காய்க்கும் முன்னே கருகிடும்.

இந்த நிலையும் அவள்
அறிந்து தான் இருந்தாள்.
ஆனா போதும் அவள்
அப்போதும் மகிழ்ந்திருந்தாள்.

ஒரு கணம் இவை
இழையோடிய மனதில்
இடியென இறங்கிக் கொள்ள
மனமுருகி விழி கசிகிறேன்........ அன்புடன் நதுநசி
(W07.05.2025:1452)

22/05/2025

தொடுவானம்
****************
எட்டில் தொட்டுவிடும்
தூரத்தில் தான்
இந்த தொடுவானம்
இருக்கின்றது.

காலையிலும் சரி
மாலையிலும் சரி
அந்த ஆதவன்
கைக்கெட்டும் தூரத்தில்.

நடுப்பகலில் மட்டும்
தொட்டு விட முடியாத
தூரத்தில் இருந்தாய்
தோன்றுகிறது நமக்கு.

இது நேர் மாறாய்
இருப்பதை அறிவோம்.
இருந்தும் மனதில்
இப்படித் தான் இருக்கிறது.

கனவுகள் கூட
கண்டுவிட்ட பொழுதில்
உணர்வுகள் மாறி
ஒன்றித்து போய்விடும்.

விழித்ததும் முடிந்தது
எல்லாம் பொய்யாக
கனவு என்றொரு பெயரோடு.
வாழ்க்கை இப்படித் தான்.

உண்மை என்ன தெரியுமா
வானமே இல்லை.
காற்றோடு காற்று
படை கொண்டது வானம்.

வெப்பம் மாறிட
காற்றும் மாறும்
இந்த வானமும் கூட.
நிலையில்லாத வாழ்வு.

ஒளி பட்டுத் தெறித்து
வானவில் வந்து
காட்சிக்கு நின்றிட
அழகிலும் அழகது.

கண்கொள்ளா காட்சி
வானில் காணலாம்.
தொட்டு விட்டு மகிழ
மாயை ஒன்று வேண்டும்.

மழைத்துளி விழ - அதில்
ஒளி ஊடுருவி உடைய
பிறந்தது தான் - இந்த
வானவில் என்றறிவோம்.

வானுயர்ந்த சோலைகள்
கிளிகள் கூடி பாடிட
குயில்களும் சேர்ந்து
இசைத்துக் கொண்டன.

மயில்களும் அகவி
தோகை விரித்தாடி
மழையை வரவேற்று விட
குளிர் காற்றோடு வரும்.

வயல்களில் வரப்போடு
ஓடிய கால்கள்
ஊன்று தடியோடு தான்
நடந்து கொள்கின்றன.

எந்த கொடுஞ் செயலும்
செய்திடாத போதும்
கிடைத்து விட்ட தண்டனை
ஒற்றைக் கால் பறிப்பு.

ஈழத்தில் நடந்துவிட்ட
விடுதலைப் போரில்
களமாடி உயிர் போனாலும்
பெருமையாக இருந்திருக்கும்.

என்ன செய்து விட
அன்று நான்
சின்ன பிள்ளையாம்.
திருப்பி அனுப்பி விட்டார்.

அவர்களுக்கு எப்படி
நாளை நடக்கும் இப்படி
என்று தெரிந்திருக்கும்.
அவர்களும் பாவம்.

எனக்குள்ள வேதனை
ஒன்றே ஒன்று தான்.
வளர்த்தவர் படித்தவர்
அவர்கள் செய்த காரியம்.

என் போன்ற சிறார்கள்
அங்கங்கள் இழந்தோம்.
அன்னையை தந்தையை
உற்ற சொத்தை இழந்தோம்.

ஆனாலும் அவர்களின்னும்
அரசாட்சி செய்து கொண்டு
வாழ்கிறார் இந்த நாட்டில்
பிரிபுக்காளாக தான்.

அவர்களுக்குள் இல்லை
பிரிவினை ஒன்று.
தெரிவினை கொண்டு
காலத்துக்கு காலம் வாழ.

இன்றும் நான் வாழ்கிறேன்
அதே நாட்டில்
அநாதையாக தான்.
நினைவுகள் தொடுவானமாக.

பலமுறை பல இடங்களில்
கூடிப் பேசியும் அவர்கள்
தீர்வுக்கு வராது போயினர்
ஏவல் பேயின் பேச்சில்.

சொந்த நாட்டில்
சொந்த மக்களிடையே
சொந்தமின்றி போகும்படி
செருக்களம் தோன்றியது.

செருப்புக் கூட
வாங்கிப் போட முடியாத
வறுமை வந்து நாட்டில்
தலைவிரித்து ஆடுகிறது.

உப்புக்கு கூட
தட்டுப்பாடு வந்துவிட்டது
கண்டு விட்ட தீர்வு
விலையை கூட்டி விட்டனர்.

இந்த தந்திரம் போல்
பால் மா விலையும்
பெற்றோல் விலையும்
தட்டுப்பாட்டை காட்டின.

ஈற்றில் விலையேற்றம்
தட்டுப்பாட்டை கலைத்தது.
பனிபடர்ந்த நிலமொன்றில்
வெய்யில் விலையேற்றமாம்.

நாளையும் நடக்கலாம்
தொடுவானம் போலொரு
பெருங்கனவுகள் பலதும்.
பாவம் நானென்று நான்.

வளம் கொண்டு
வசதியாக வாழ்ந்துவிட்டு
என் சக தோழர்கள்
போரின் நடுவில் பயணம்.

வெளி நாடொன்றில்
அவர்கள் தங்கள் வாசம்.
வசதி வசதியோடு கூடி
என்னை எள்ளி நகையாடியது.

மண்ணின் மைந்தர்கள்
மாண்டு போயிட
மரணம் கூட வந்து என்னை
இன்னும் அழைக்கவில்லை.

இதுவும் கைக்கெட்டாத
என் தொடுவானம் தான்.
இனிமையும் கனிமையும்
இனி எனக்கெதற்கோ?

தனி மரமாய் தான்
நான் வாழ்ந்து போகிறேன்.
வந்த குண்டுகள்
கூட்டமாய் கூட்டிச் செல்ல.

எந்தன் சொந்த மெல்லம்
செத்து பிணமாக கிடக்க
ஒற்றை காலை காணவில்லை.
வலிகூட எனக்கு தெரியவில்லை.

ஆனாலும் இன்றும்
வலிக்கிறது இவையெல்லாம்.
சொல்லிட கேட்டு
ஆறுதல் சொல்லிட இல்லை.

வந்தவர் எல்லாம்
வாய்க்கு வந்தபடி பேசி
வாழ்த்தி ஆறுதல் சொல்லி
போவதாய் எண்ணிக் கொள்ள

எனக்குள் மட்டும்
வரித்துக் கொள்கின்றன.
இரண்டும் கெட்ட நிலையில்
என் வாழ்க்கை தொடர்கிறது........ அன்புடன் நதுநசி
(W07.05.2025:1204)

22/05/2025

உன் விழிகளில்
******************
உன் விழிகளில்
உணர்வின் வலி
வழிந்தோடிக் கொள்ள
உள்ளம் வலிக்கிது.

மறந்திட முடியாத
மனம் நொந்து விட்ட
மரணங்கள் கடந்து
மண் வாழ்கிறாய்.

வரம் தந்து விடும்
வானுள் உறையும்
உத்தமரும் அப்போது
மறந்து விட்டிருந்தனர்.

அழுது விட்டு போகும்
அரிதல்ல இது.
விழி வழிந்து நீயும்
வழி மறந்து நிற்கிறாய்.

படையோடு மோதி
நடை போடும் தீரம்
நமக்குள் இருந்தும்
நடை தளர்ந்து போனோம்.

எரிமலைக்குள் நாம்
இறங்கி நடந்ததுண்டு.
அச்சம் அப்போது
நமக்கு இருந்ததில்லை.

நமக்குள் துரோகம்
வந்து தான் போனது.
எதிர் நாம் கொண்டோம்
வெறி கொண்டு எழுந்தோம்.

ஈற்றில் நாம் இறந்திட
காரணமாய் போனது.
ஈ கூட நம்மவர் உடல்
கரைத்து உண்டு களிக்க.

துரோகங்கள் ஒரு போதும்
தூரம் இருப்பதில்லை.
அவை எல்லாம்
நமக்குள் இருந்து பிறக்கின்றன.

துரோகத்தின் துயரத்தை
உன்னுடல் தாங்கியதால்
நிரந்தரமாய் தூங்குகிறாய்
புவி விட்டு நீ போகாதே!

உடல் இருந்த பல
உறுப்புகள் துறந்தாய்.
பலம் இருந்து உன் தேகம்
பலமிழந்து போனதே!

பலர் தனித்து நடந்திட
போதனைகள் செய்தவள் நீ.
உனக்கின்று துணைக்கு
யாருமில்லை என்ற நிலை.

உன் விழிகளில்
உள்ளத்து சோகம்
நதும்பிக் கொள்கிறது. - நான்
உன் விழிநோக்க நொந்தேன்.

அன்றெல்லாம் நான்
ஆயிரம் பேருக்கு நடுவிலும்
உன் விழிகளில் இருக்கும்
ஒளியின் வழியில் காண்டேன்.

குண்டு கண் உனக்கு
முட்டைக் கண்.
உன் விழிகளில் வழியில்
சொன்னதுண்டு நான்

என்னை நீ அன்று
விழியால் அளந்த போது.
அளவில் குறைந்து
உன்னுள் சுருங்கிக் கொண்டேன்

மதியால் உன்னுள்
உடனிருந்து வாழ்ந்திட
இடம் தந்து கொண்டாய்.
படமிருந்து நாளும் பார்க்க.

பகை வீடு நெடுந்தூரம்
பயணம் செய்த போதும்
என் சட்டைப் பையில்
உன் படம் இருக்கும்.

உச்சி வெய்யில்
வெளுத்துக் கொள்ள
தேகம் பற்றி எரியும்
உடல் வியர்த்து அப்போது.

சிறு பற்றை நமக்கு
பெரும் காடாகிட
பகைவர் கண்ணில்
மண் தூவி இருப்போம்.

இரு துருவ பூமியில்
இருவரும் ஒன்று நமக்கென்று
பகிர்ந்து கொண்டு
வாழ்ந்து போவதுண்டு.

நகமும் தசையுமாய்
இப்போது இருக்கிறாய்
என்னருகில் நீயும்.
ஒரு வார்த்தை கூட பேசாது.

ஒளி இழந்துபோன
உன் விழிகளில்
உன்னகை மட்டுமே மிச்சமாக
புன்னகை எங்கோ?

உள்ளம் இருந்து வந்த
ஆனந்தத்தின் வெளிப்பாடு
கண்களை பிரகாசிக்க
உதடு மலர்ந்தால் புன்னகை.

அந்த மாற்றம் - இனி
என்று வந்து சேரும்
உன்னில் என்னை மகிழ்விக்க.
உன்னால் அழுகிறேன் தினம்.

பாசப் பரபரப்பில்
கன்னங்கள் குதுகலிக்க
பேச்சோடும் சிரிப்போடும்
சிறப்பாக இருந்தவள் நீ.

மண்மீட்பு தடத்தில்
உன்னை இழந்து
நடைப் பிணம் ஆனாய்.
இருந்தும் என்னுள் நீ.

கொடுந்துயரில் நம்
நெடும் பயணம் தொடர
உன் விழிகளில் மலரும்
மௌனப் பார்வையது போதும்.

பகை வீடு புகுந்து
புயலென வீசிய நாட்கள்
அந்த நினைவுகள் கேட்டு
உன் விழிகள் கலங்கிடும்.

இருப்புக்கு சான்றாக
உன் உயிர்ப்புக்கும்
இது ஒன்றே காட்சி ஆகும்.
நினைத்திட வலிக்கிறது.

காதலின் இனிமை - உன்
இந்த நிலை கண்டு
கசந்து போவதுண்டு.
எனக்கு அப்படி இல்லை.

உன்னை என்னருகில் வைத்து
எனக்குள் சுமப்பதால் தான்
பிறக்கிறது எனக்குள் கோபம்
பகை வீடு மீது வெறுப்பால்.

உன்னை தாங்கிய
எந்தன் நெஞ்சில்
மிடுக்கொன்று மலர்ந்து
பூப்பூத்து இருக்கிறது.

இனியொரு பொழுதில்
உன் விழிகளில்
உள்ளத்து மகிழ்ச்சி
பொங்கிட வேண்டும்.

புவியில் ஈரமுள்ள
தமிழொன்று மலர்ந்தால்
மௌனமான உன் தேகம்
சிலிர்த்துக் கொள்ளும்........ அன்புடன் நதுநசி
(W06.05.20251645)

22/05/2025

நான் நானாக இல்லை
*************************
நாளை வந்து விடுவாள்.
மனதில் இருந்தது
உறுதியான எண்ணம்.
அது கற்பனையோ?

அவள் வரவில்லை.
நாட்கள் உருண்டோடி
காலம் நீண்டு கொண்டது.
ஆனாலும் வரவில்லை.

மெல்ல மனதில்
அச்சம் படர்ந்து கொண்டது.
மனம் தனக்குள்
அழுது கொள்ள ஆரம்பித்தது.

நான் என்னை மெல்ல
இழக்க ஆரம்பித்து விட்டேன்.
அவளின் வரவிற்காக
ஏங்கிய என் விழிகள் சோர்ந்தது.

அழுதழுது நான் விம்பிட
விழி சிவந்து கொண்டது.
நெஞ்சம் படபடத்து கொள்ள
உடல் தளர்ந்து நடை தளர்ந்தது.

நாளை வருவாள்.
அவள் நாளை மறு நாள்
வந்து விடுவாள்.
பதில் வந்து கொண்டிருந்தது.

ஆம்.அவள் அனுப்பிய
பதில் நனவானது.
ஒரு நாளில் நான்
வருவேன் என்றாள்.

வந்து விட்டாள்.
நான் என்னை இழந்து
இறந்து விட்டேன்.
வித்துடலாக வீடு வந்தாள்.

கண்கள் இப்போது
கசிந்துருகி விழி கசிய
மறுத்து விறைத்து விட்டன.
கண்ணீர் காய்ந்து விட்டது.

சுற்றம் கூடி வந்து - அவளுக்கு
மாலை சூடிக் கொண்டது.
அவள் மீது பூமாரி பொழிந்து
போற்றி வணங்கி நின்றது.

வீரமங்கை அவள்.- இப்போது
தீரம் மிக்க போரில்
தன்னுயிர் துறந்து - பகை எரித்து
சாதனை செய்து கொண்டவள்.

எண்ணிக் கொண்டவர்கள்
வியப்பில் அவளை
கொழு விருத்தி போற்றினார்கள்.
என்னால் முடியவில்லை.

புன்னகை சிந்திய முகம்
முறைத்த பார்வையோடு
விழிகள் மூடியபடி இப்போது
அமைதியாக கிடக்கிறது.

உடல் போர்த்திய அந்த
வரியுடை அவளுக்கு
கம்பீரம் செய்து கொண்டது.
கறுப்பு வரி விறைக்கச் செய்தது.

உள்ளூர ஒரு மகிழ்வு.
உடலாவது வீடு வந்ததே!
கறுப்பு வரி அணிந்த
உடல்கள் நீறாகிப் போய்விடும்.

போரின் வலிமையில்
அப்படி ஒரு வரலாறு
கறுப்பு வரியுடைக்கு உண்டு.
அணிந்து நடந்தால் மிடுக்கு தான்.

பலமுறை அவளிங்கே
கறுப்பு உடை தவிர்த்து
உடையணிந்து நடப்பதுண்டு.
அதனால் எனக்கு வியப்பு.

அவளை கண்டு விட்டால்
மனம் மகிழ்ந்து விடும்.
அன்னையும் தன் இறுதியை
உறுதியாக முடித்திருப்பாள்.

அவளின் இறுதியை
அன்னை கணடு துவளும்
துர்ப்பாக்கியம் கிடைத்துள்ளது.
காலம் கொடியது போலும்.

விந்தை மிக்க பூமியிது.
கடைக்குட்டி அவள்.
அண்ணா என்று கொஞ்சிய
செல்லம் எல்லாம் இனி.

ஒற்றை பெண் பிள்ளை அவள்.
அண்ணாக்கள் அறுவருக்கு
ஒற்றை தங்கை அவள்.
வீட்டின் குல விளக்கவள்.

மூத்தவர் எல்லாம்
போரில் கலந்து விழுந்திட
என்னோடு அவளும் இங்கே
அன்னைக்கு மிச்சமாகிட.

தந்தையை கொன்று விட்டு
வன்மம் தீர்த்தது படைவீடு
அந்த வலி சொல்லி அன்னை
பலமுறை கண் கலங்கிய துண்டு.

நிலம் பறித்து நம்மை துரத்தி
நம் வீடுடைத்து நிலம் வாழும்
எதிரிக்கு பதிலுரைக்க தான்
அண்ணன் வழி சென்று விட்டாள்.

காலிழந்து நான் என்
கை இழந்து மனை மீண்டு
அவளை கண்டு விட்டு மகிழ்ந்து.
இனி நான் எண்ண செய்திட?

அன்னை சுமந்த தாய்நாடு
மண் வாழும் மனை வீடு.
இனி ஒரு வழி மட்டும்
எரித்திட வேண்டும் படைவீடு.

துயிலில்லம் அவள் சென்று
அமைதி கொண்டு துயின்றிட
அன்னை வீடு இடம் மாற்றி
அவள் ஆறிட வேண்டும் இனி.

ஊணம் மறந்து விட்டு - அதை
மறைத்து விட்டு நான்
புது படையணி சேர்ந்து
மீண்டும் போரிட போவேன்.

என்னை நான் இழந்ததால்
நான் நானாக இல்லை.
என்ற உணர்வோடு நானும்
கறுப்பு வரியுடை அணிந்து.

அப்பப்பா என்ன இது.
இப்படி ஒரு நண்பன்
எழுதி வைத்து போயிருக்க
தட்டிப் படித்துக் கொண்டேன்.

என்னை நான் இழந்து
நான் நானாக இல்லை.
என்று சொல்லும் அளவுக்கு
நிலை மாற்றி போயிருக்கிறது........ அன்புடன் நதுநசி
(W29.04.2025:1231)

Address

Jaffna
BOOK

Website

Alerts

Be the first to know and let us send you an email when என்றும் அன்புடன் ஐபிசி வானொலி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category